
குவாலா பெராங், ஜூன்-30 – பெசூட், பூலாவ் பெர்ஹெந்தியான் தீவின் கரையோரத்தில் படகுக் கவிழ்ந்து 3 பயணிகள் உயிரிழந்த சம்பவத்தை, போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
திரங்கானு போலீஸ் தலைவர் டத்தோ மொஹமட் கைரி கைருடின் அதனைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஜேக்கேட் அணிவது, மாலை 6.30 மணிக்கு படகு டேக்சி சேவை கூடாது என்ற விதிமுறைகளும் அவற்றிலடங்கும்.
சம்பவம் நிகழ்ந்திருப்பதோ இரவு 11 மணிக்கு மேல்; அப்படியென்றால் அங்கு விதிமுறை மீறல் நிகழ்ந்திருப்பதாக கைரி கூறினார்.
இன்னொரு விஷயம், ஒரு நேரத்தில் 8 பேரை மட்டுமே படகில் ஏற்ற வேண்டும்; ஆனால் அதை மீறி இங்கு 15 பேர் வரை படகில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
இது தவிர, படகு ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் சிறுநீர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
ஆக மேற்கண்ட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அறிக்கைத் தயாராகும் என அவர் சொன்னார்.
கடல் கொந்தளிப்பு உட்பட வானிலை சரியில்லாத நேரங்களில், பயணிகளுக்கு ஆபத்தைக் கொண்டு வரும் வகையில் படகுகளை கடலுக்குச் கொண்டுச் செல்லக் கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
சனிக்கிழமை இரவு சம்பவத்தில் பூலாவ் பெர்ஹெந்தியான் கெச்சிலிலிருந்து பூலாவ் பெர்ஹெந்தியான் பெசார் செல்லும் வழியில் படகுக் கவிழ்ந்ததில், 15 பயணிகளில் 3 பேர் நீரில் மூழ்கி மாண்டனர்.
40 வயது S ஆறுமுகம், அவரின் 3 வயது மகள் சர்விகா, உறவுக்கார மகளான 10 வயது வெண்பனி ஆகியோரே மரணமடைந்தவர்களாவர்.
இருவர் காயமடைந்த வேளை, 10 பேர் காயங்களின்றி தப்பினர்.