
கோலாலம்பூர், செப்டம்பர்-28,
“தர்மா மடானி திட்டம்” மூலம், நாட்டிலுள்ள 1,000 இந்து கோவில்களுக்கு மொத்தம் RM20 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ள மடானி அரசாங்கத்தின் நடவடிக்கையை, சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் வரவேற்றுள்ளார்.
ஒவ்வொரு கோவிலுக்கும் RM20,000 வழங்கும் இந்த உதவி, மித்ராவின் கீழ் முதல்முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த நிதி ஒதுக்கீடு, தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அவர்களின் முயற்சியாலும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களின் வற்றாத ஆதரவாலுமே சாத்தியமானதாக குணராஜ் சொன்னார்.
இந்நிதி சமூகச் செயல்பாடுகள், சமய நிகழ்ச்சிகள் மற்றும் B40 வர்கத்தினருக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு பயன்படும் என்றார் அவர்.
இவ்வேளையில் பல கோவில் தலைவர்களும் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இவ்வுதவியின் மூலம் கோவில்களைப் பராமரிப்பதோடு, அடிப்படை மேம்பாடு, சமய வகுப்புகள், இளைஞர் பயிற்சி முகாம்கள், பண்பாட்டு நிகழ்வுகள் மற்றும் உணவு/கல்வி உதவிகளையும் வழங்க உதவும் என அவர்கள் கூறினர்.
இந்தியச் சமூக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள டத்தோ ஸ்ரீ ரமணன், கடந்த புதன்கிழமை இந்த ‘தர்மா மடானி திட்டத்தை’ அறிவித்தார்.
இந்தியர்கள் குறிப்பாக B40 வர்கத்தினரை வலுப்படுத்தும் முயற்சியாக மித்ராவின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் 5 முன்னெடுப்புகளில் இதுவும் ஒன்றாகும்.