
வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டில் தாமதம்; விளக்கம் கோரும் PRIMAS
கோலாலம்பூர், பிப்ரவரி-12,
மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கமான PRIMAS வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டு முறையில் ஏற்பட்ட தாமதம் மற்றும் குழப்பம் குறித்து கடும் கவலை தெரிவித்துள்ளது.
2025 ஆகஸ்டில் அரசாங்கம் விண்ணப்பங்களைத் திறந்தாலும், வழிகாட்டுதல்கள் அக்டோபர் மாதம் மட்டுமே வெளியிடப்பட்டன; இதனால், உணவக உரிமையாளர்களுக்கு விண்ணப்பிக்க குறுகிய காலமே கிடைத்ததாக அச்சங்கத்தின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி கூறினார்.
அதனைத் தொடர்ந்து, டிசம்பர் 19-ஆம் தேதி உள்துறை அமைச்சு, விண்ணப்ப நேர்காணல் அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாகவும், முகப்பிடங்கள் மூடப்பட்டதாகவும் அறிவித்தது.
சில நாட்களுக்குப் பிறகு, டிசம்பர் 24ஆம் தேதி, வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு முழுமையாக நிறைவடைந்ததாகவும், புதிய விண்ணப்பங்கள் மூடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
பின்னர், 2026 ஜனவரி 19 முதல் மார்ச் 31 வரை புதிய portal மூலம் சிறப்பு விண்ணப்ப காலம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த portal இன்னும் “Full – No Timeslots Available” என்ற நிலையை மட்டுமே காட்டுகிறது.
இதனால், உணவக உரிமையாளர்கள் தேவையான தொழிலாளர்களைப் பெற முடியாமல், கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக கோவிந்தசாமி சொன்னார்.
இந்த தாமதமும் குழப்பமும் உணவகத் துறையின் செயல்பாட்டை பாதிக்கிறது.
எனவே, அரசாங்கம் உடனடியாக விளக்கம் அளித்து, தெளிவான தீர்வுகளை எடுக்க வேண்டும் என PRIMAS சார்பில் அவர் கோரிக்கை விடுத்தார்.



