
துயர்ப் பிரிவு: குவாலா நெராங் மீன் குளத்தில் 4 வயது சிறுவன் மூழ்கி மரணம்
குவாலா நெராங் , பிப்ரவரி 16 –
கெடாவில், குவாலா நெராங், கம்போங் பெரிக்கிலுள்ள மீன் குளம் ஒன்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் மூழ்கி மரணம் அடைந்தான் . இந்த துயரச் சம்பவம் நேற்று மாலை மணி 6.15 அளவில் நிகழ்ந்தது.
சுயநினைவற்ற நிலையில் மீன் குளத்தில் மிதந்த நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த சிறுவன் உடனடியாக குபாங் பாசுவிலுள்ள ஜித்ரா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சைக்கு முன்னதாகவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அந்த சிறுவன் முதலில் தனது வீட்டிற்கு அருகே இருந்த மீன்குட்டைப் பகுதியிலுள்ள மணலில் விளையாடிக் கொண்டிருந்ததாக அவனது பெற்றோர் தெரிவித்ததாக Padang Terap மாவட்ட போலீஸ் துணை Superintendan அப்ஷானிசாம் முகமட் சம் ( Affzanisham Mohammad Sham ) கூறினார்.
அதன்பிறகு சுற்று வாட்டாரத்தில் தேடியும் தங்களது மகன் காணவில்லை என்பதை அறிந்து அச்சிறுவனுக்கு ஏதோ விபரிதம் நடந்ததாக அவனது பெற்றோர் உணர்ந்தனர். அதனைத் தொடர்ந்து தங்களது மகனின் காலணி மீன் குட்டையில் காணப்பட்டதோடு அவனது உடல் அங்கு மிதந்ததைக் கண்டு அவனது பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானதாக அப்ஷானிசாம் தெரிவித்தார்.



