
பிறப்பின்போது மூளை சேதம் 9 வயது சிறுவனுக்கு RM5.63 மில்லியன் இழப்பீடு – நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர், பிப்ரவரி 20 –
கடந்த 2017ஆம் ஆண்டு தெலுக் இந்தான் மருத்துவமனையில் பிறக்கும் போது மூளைக்கு ஆக்சிஜன் செல்லாததால் கடுமையான சேதம் ஏற்பட்ட 9 வயது சிறுவனுக்கு மலேசிய அரசு 5.63 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது மூளைக்கு ஏற்பட்ட சேதத்தால் சிறுவனின் உடல் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அச்சிறுவன் தனியாக நகர முடியாது, மற்றவரால் உணவு ஊட்டப்பட வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல் முழுமையாக பிறரைச் சார்ந்தே வாழ்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவனின் தரப்பினர், அரசு மற்றும் 15 மருத்துவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்நிலையில் அரசு தரப்பு 2022இல் பொறுப்பை ஒப்புக்கொண்டதால், இழப்பீட்டு தொகை நிர்ணயம் மட்டும் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மொத்த இழப்பீட்டில் பெரும்பகுதி நீண்டகால பராமரிப்பு, மருத்துவ சிகிச்சை, மறுவாழ்வு, உதவி உபகரணங்கள், பொருத்தமான வீடு மற்றும் சக்கர நாற்காலி வசதி கொண்ட வாகனம் ஆகிய தேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை சிறுவனின் நலனுக்காக அவனது தந்தையால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



