13 வயதிலேயே செயற்கைப் போதைப்பொருள் பிடியில் சிக்கும் மாணவர்கள்

கோலாலம்பூர், பிப்ரவரி-21,
நாட்டில் 13 வயது மாணவர்கள் கூட செயற்கை போதைப்பொருளில் சிக்கி வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
2024-ல் மட்டும், 95 ஆயிரம் பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக, AADK எனப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் தரவு தெரிவிக்கிறது.
இது 2020-ல் பதிவான எண்ணிக்கையை விட 73 விழுக்காடு அதிகமாகும்.
கடந்தாண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் அத்தகைய 76 ஆயிரம் சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் 16 முதல் 17 வயது மாணவர்கள்; அடுத்ததாக 13 முதல் 15 வயது மாணவர்களும் அதிகமாக சிக்கியுள்ளனர்.
ஷாபு, Pil Kuda, யாபா, எக்ஸ்டசி போன்ற செயற்கை போதைப்பொருள்களும், Erimin 5, APO 5, Dormicum போன்ற மனநோய் மருந்துகளும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
இவை மாய சிந்தனை, மனஅழுத்தம், மனக்கிளர்ச்சி, வன்முறை போன்ற தீவிர விளைவுகளை ஏற்படுத்துவதாக, AADK தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ Ruslin Jusoh தெரிவித்தார்.
மூளையின் செயல்பாட்டை நேரடியாக பாதிப்பதால், சிகிச்சை மிகவும் கடினம்.
Opioid போதைப் பொருளுக்காவது மாற்று மருந்துகள் உள்ளன; ஆனால் செயற்கை போதைப்பொருளுக்கு மருந்து மாற்று இல்லை.
பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வது, குடும்ப ஆதரவு, ஆலோசனை, சமூக சிகிச்சை மூலம் மட்டுமே என அவர் சொன்னார்.
“இது குற்றம் மட்டுமல்ல, பொது சுகாதார அவசர நிலை” எச்சரித்த Ruslin, உடனடி விழிப்புணர்வு பிரச்சாரங்கள், ஆரம்ப தலையீடுகள் அவசியம் என வலியுறுத்தினார்.



