
கோலாலாம்பூர், மார்ச்-18-நோன்புப் பெருநாள் காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, APM எனப்படும் பொதுத் தற்காப்புப் படை Op Prihatin சோதனை நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
இந்நடவடிக்கையில் 2,364 அமுலாக்க அதிகாரிகளும் பணியாளர்களும் களமிறங்குகின்றனர்.
அதோடு, 250 அம்புலன்ஸ் வண்டிகள், 300 நான்கு சக்கர வாகனங்கள், 100 விரைவு மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் 650 வாகனங்கள் பங்கேற்கின்றன.
நாளை மார்ச் 19 முதல் 29 வரை நடைபெறும் இந்த 10 நாள் நடவடிக்கையில், முக்கியச் சாலைகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அதே சமயம் சாலை விபத்துகளில் முதலுதவி, சிறிய வாகன பழுதுபார்ப்பு, மனிதாபிமான சேவை, பாதுகாப்பு அறிவுரை போன்றவையும் வழங்கப்படும்.
மேலும், பாதுகாப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் வாகனங்களுக்கு வழங்கப்படும்.
மக்கள், வாகனங்களை நன்றாக பராமரித்து, வேகக் கட்டுப்பாட்டை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்ட APM, பயணத்தின் போது சோர்வாக இருந்தால் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியது.
ஆபத்து அவசரங்களுக்கு 999 என்ற எண் அல்லது Save Me 999 செயலியைப் பயன்படுத்தலாம்.



