
கோலாலம்பூர், மார்ச்-30- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய
413,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளை அதன் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நாளை மார்ச் 31 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாணவர்கள் தங்களது பள்ளியில் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் 3,350-க்கும் மேற்பட்ட மையங்களில் மொத்தம் 413,299 மாணவர்கள் கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வை எழுதியதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
மேலும் நாளை காலை 10 மணி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை 6 மணி வரை பல்வேறு முறைகள் மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
இணையம் வழியாக அதிகாரப்பூர்வ MyGovernment இணையதளத்திற்குச் சென்று தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்து தேர்வு முடிவுகளை பெறலாம்.
அதேவேளையில் குறுஞ்செய்தி வழியாக ‘SPM NoKP AngkaGiliran’ எனத் தட்டச்சு செய்து 15888 என்ற எண்ணிற்கு அனுப்புவதன் மூலம் தேர்வு முடிவை பெறமுடியும்.
இதனிடையே தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதியவர்கள் தாங்கள் பதிவு செய்த மாநில கல்வித்துறை மூலம் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.



