
புத்ராஜெயா, ஏப்ரல்-3-“BDR என்பது ‘Baring Duduk Rehat’ அதாவது ‘படுத்துறங்குதல், உட்காருதல், ஓய்வெடுத்தலோ’ அல்லது ‘சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங்’ செய்வதற்கான அனுமதியோ அல்ல. அது, முழுமையான உற்பத்தி மற்றும் ஒழுங்கை பின்பற்ற வேண்டிய பொதுச் சேவை சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.”
ஏப்ரல் 15 முதல், அரசாங்க ஊழியர்கள் ‘BDR’ அதாவது ‘வீட்டிலிருந்து வேலை” செய்ய அனுமதிக்கப்படும் நிலையில், அரசாங்க தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் அவ்வாறு நினைவூட்டியுள்ளார்.
வீட்டிலிருந்து வேலை செய்தல் ஒரு சலுகையாக இருந்தாலும், பொதுச் சேவைத் தரமும் உற்பத்தி ஆற்றலும் குறையக் கூடாது; அலுவலகத்தில் இருப்பது போலவோ அல்லது அதற்கும் மேலோ வேலைத் தரம் இருக்க வேண்டும் என, அவர் சொன்னார்.
எனவே, BDR நடைமுறையின் போது, பணியாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் வழக்கம் போல் பின்பற்றுவதையும், KPI எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட முதன்மை அடைவுநிலைக் குறியீட்டை அடைவதையும் அந்தந்தத் துறைத் தலைவர்கள் உறுதிச் செய்ய வேண்டுமென்றார் அவர்.
உலகளாவிய எரிசக்தி சவால்களைச் சமாளிக்கும் முயற்சியாக அரசு ஊழியர்களுக்கு இந்த BDR திட்டத்தை புத்ராஜெயா அறிவித்துள்ளது.
அவ்வகையில், அலுவலகத்திலிருந்து 8 கிலோ மீட்டருக்கு மேல் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஏப்ரல் 15 முதல் வாரத்திற்கு 3 நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இது, கோலாலம்பூர், புத்ராஜெயா, சிலாங்கூர் மற்றும் மாநில தலைப்பட்டணங்களில் உள்ள ஊழியர்களுக்கு பொருந்தும்.



