
வாஷிங்டன், ஏப்ரல்-9-ஈரானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட மறு நாளே, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தனது வழக்கமான ஆயுதமான ‘இறக்குமதி வரி’யை கையில் எடுத்துள்ளார்.
“ஈரானுக்கு இராணுவ ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாடும், இனி 50 விழுக்காட்டு வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும்” என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதில் எந்த விலக்கும் அளிக்கப்பட மாட்டாது என அவர் தனது சமூக வலைத்தளமான Truth Social பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பாக சீனா மற்றும் ரஷ்யாவைக் குறிவைத்தே இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
அவ்விரு வல்லரசுகளும் ஈரானின் நட்பு நாடுகள் என்பதால் அவற்றுக்கு ட்ரம்ப் நெருக்குதல் அளிக்க விரும்புவதையே இது காட்டுகிறது.
சீன அதிபர் சீ சின் பிங்கைச் சந்திக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரான் மீதான இராணுவ அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா பொருளாதார ரீதியிலான இந்த யுத்தியைக் கையாளுவதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், ட்ரம்ப்பின் வரி விதிப்பு அதிகாரத்தை அமெரிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் கட்டுப்படுத்தியிருப்பது இதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இனி எந்த புதிய வரியையும் அவர் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என்பதே…
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி மிரட்டலுக்கு உலக நாடுகளின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…



