
ஜோகூர் பாரு, ஏப்ரல்-11-ஜோகூர் மாநில டாக்சி ஓட்டுநர்களின் நலன் மற்றும் தொழில் சவால்கள் குறித்து முக்கியமான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் நடைபெற்றது.
மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ரவின் குமார் கிருஷ்ணசாமி, 14 இந்திய டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து, அவர்களின் தினசரி சவால்களை நேரடியாகக் கேட்டறிந்தார்.
இச்சந்திப்பு, டாக்சி ஓட்டுநர்களின் குரலை அரசாங்க வளர்ச்சி திட்டங்களில் பிரதிபலிக்கச் செய்யும் முக்கியத் தளமாக அமைந்தது.
டாக்சி நிலையங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், அனுமதி புதுப்பிப்பு சிக்கல்கள், மற்றும் வாகன பராமரிப்பு செலவுகளை குறைக்கும் உதவி திட்டங்கள் போன்றவை கலந்துரையாடலில் முக்கியமாக பேசப்பட்டன.
மேலும், இந்த டிஜிட்டல் காலத்தில் பின் தங்கி விடாதிருக்க, பாரம்பரிய டாக்சி சேவைகளில் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் டாக்சி ஓட்டுநர்கள் காட்டும் மனஉறுதி மற்றும் அர்ப்பணிப்பை, தெங்காரோ சட்டமன்ற உறுப்பினருமான ரவின் குமார் பாராட்டினார்.
கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட அனைத்து கருத்துகளும் பரிந்துரைகளும் மேல் நடவடிக்கைக்காக ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.



