
ஜோகூர் பாரு, ஏப் 23 – ஜோகூர் பாரு Stulang Laut பகுதியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் வெளிநாடுகளைச் சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெண்களில் சிலர் விபச்சார நடவடிக்கை மேற்கொள்ளும் முக்கிய மையமாகவும் அந்த இடம் திகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
பல்வேறு குற்றங்களுக்காக நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் மூலம் அந்த விபச்சார மையம் முறியடிக்கப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறையின் இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் தெரிவித்தார்.
அந்த வளாகத்தின் மேலாளர் என்று நம்பப்படும் உள்ளூர்வாசி ஒருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குடிநுழைவு விதிகளை மீறிய குற்றங்களுக்காக 37 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இரண்டு இந்திய ஆடவர்கள் உட்பட , பிலிப்பைன்ஸ், வங்காளதேசம் , பாகிஸ்தான் , இந்தோனேசியா மற்றும் சீன ஆடவர்களும் அடங்குவர்.
மேலும் 16 தாய்லாந்து பெண்களுடன் , பிலிப்பின்ஸ் மற்றும் வியட்னாமிய பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
20 முதல் 53 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் பொழுதுபோக்கு மைய வாடிக்கையாளர்களுக்குப் பணியாளர்களாகப் பணிபுரிந்ததாக நம்பப்படுகிறது.



