
சுங்கை மூவார் வெள்ளத் தடுப்புக்கான 3ஆவது கட்ட திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாவது பகுதிகளின் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களைச் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சருமான யுனேஸ்வரன் ராமராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.
இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்ற நிலையை மதிப்பீடு செய்வதோடு, உண்மை மற்றும் துல்லியமான தகவல்களை சிகமாட் மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் அவரது அந்த ஆய்வுப் பயணம் அமைந்தது.
குறிப்பாக, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு இந்தத் திட்டம் மிகுந்த நம்பிக்கையைக் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் மிகப்பெரிய முயற்சியாக 2024 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 25 கிலோமீட்டர் நீளத்தில் அமையும் இந்தத் திட்டம் 2029 ஆம் ஆண்டு முழுமையடையும்.
தற்போது 35 விழுக்காட்டிற்கும் மேலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின்வழி சுமார் 22,000 மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சுங்கை ஜெமெந்தாவில் அமைந்துள்ள RTB 3 ஆவது கட்டத்தின் 2 ஆவது திட்டத்தின் பணிகளை விரைவுபடுத்தும் முயற்சிகள் காரணமாக 2027ஆம் ஆண்டுக்குள் அத்திட்டம் முடிவடையும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த RTB திட்டம் ஒரு சாதாரண கட்டுமானத் திட்டமாக அல்லாமல், மக்களின் உயிர், சொத்து மற்றும் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கியமான தேசிய முயற்சியாக இருப்பதால் இந்தத் திட்டத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதோடு ,அதன் பலன் மக்களுக்கு முழுமையாக சென்றடைவதையும் அவர் உறுதியளித்தார்.



