
டெங்கில், மே-4,
சிலாங்கூர், டெங்கிலில் உள்ள R&R பகுதியில் சட்டவிரோதமாக வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட சோதனையில், முறையாக ஆவணங்கள் இன்றி பணியாற்றிய 20 வெளிநாட்டுப் பிரஜைகள் கைதுச் செய்யப்பட்டனர்.
முறையான வேலை அனுமதி இன்றி வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படும் உணவு அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, அங்கு பணியாற்றிய பல தொழிலாளர்கள் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
கைதுச் செய்யப்பட்டவர்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர்.
அவர்கள் முறையான பயண ஆவணங்களை வைத்திருக்கவில்லை மற்றும் தங்கும் காலக்கெடு முடிந்தும் தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.
சட்டவிரோதத் தொழிலாளர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிநுழைவுத் துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
கைதுச் செய்யப்பட்ட அனைவரும் குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர்.



