
ஜகார்த்தாவிலுள்ள Soekarno Hatta அனைத்துலக விமான நிலையம் வழியாக, 267.5 கிராம் தங்கத்தை ஒருமுறை பயன்படுத்தும் டயப்பரில் கடத்தியதாகக் கூறப்படும் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடத்துவதற்கு கூலியாக ஐந்து மில்லியன் ரூபியா அதாவது சுமார் 1,120 ரிங்கிட் பேசப்பட்டதை ஒப்புக்கொண்ட அந்த சந்தேக நபர், அப்பணம் தம்மிடம் இன்னும் செலுத்தப்படவில்லை என்று விமான நிலைய சுங்கத் துறை தலைவரிடம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அந்த ஆடவருக்கு இந்தோனேசியாவில் ஏழு நாட்கள் விடுமுறையை கழிப்பதற்கான பயணச்சீட்டும், ஜகார்த்தாவில் தங்குவதற்கான இடமும் வழங்கப்பட்டிருந்தது.
அந்த நபர் ஏழு நாட்கள் இந்தோனேசியாவில் தங்கியிருந்ததால் இது முன்கூட்டியே செய்ப்பட்ட ஏற்பாடா அல்லது உண்மையில் விடுமுறைக்கு சென்றாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கத்தின் மதிப்பு 700 மில்லியன் ரூபியா அதாவது 156,857 ரிங்கிட்டாகும். அந்த ஆடவர் புதுடில்லிக்கு செல்வதற்காக சிங்கப்பூருக்கு புறப்பட திட்டமிட்டிருந்தார் என்றும் அறியப்படுகிறது.



