
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 2: தாய்லாந்திலிருந்து வரும் 5 வகை இறால்களின் இறக்குமதிக்கு மலேசியா ஜூன் 1 முதல் தற்காலிக தடை விதித்துள்ளதால், தாய் இறால் விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மலேசியா தாய்லாந்தின் முக்கிய இறால் ஏற்றுமதி சந்தைகளில் ஒன்றாகும். இந்த திடீர் முடிவு ஏற்றுமதியாளர்களின் வருமானத்தையும் வணிக நம்பிக்கையையும் பாதிக்கக்கூடும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
தாய்லாந்து ஆண்டுதோறும் சுமார் 6,000 முதல் 8,000 டன் இறால்களை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. தடை காரணமாக உள்நாட்டில் இறால் அதிகமாக குவிந்து விலை குறையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகளை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மலேசிய வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு விளக்கியுள்ளது.



