
குவைத் சிட்டி, ஜூன்-7-மத்தியக் கிழக்கில் தற்காலிகமாக நிலவி வந்த அமைதியை குலைக்கும் வகையில், ஈரான் மீண்டும் நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலுக்கு குவைத் மற்றும் பஹ்ரேய்ன் நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைப் பதிவுச் செய்துள்ளன.
அங்குள்ள “எதிரி முகாம்களை” குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் ஈரானின் ராடார் தளங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை என அது கூறிக் கொண்டது.
குவைத் மற்றும் அமெரிக்காவின் 5-ஆவது கடற்படைத் தளம் அமைந்துள்ள பஹ்ரேய்னை நோக்கி ஈரான் 7 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) உறுதிப்படுத்தியது.
இத்தாக்குதல் நாட்டின் இறையாண்மையை சீண்டும் “ஆபத்தான எல்லை மீறல்” என்றும், மக்களின் உயிருக்கு விடப்பட்ட நேரடி மிரட்டல் என்றும் குவைத் வெளியுறவு அமைச்சு சாடியது.
பஹ்ரேய்னும் இதனை ‘வெளிப்படையான ஆக்கிரமிப்பு’ என கண்டித்தது.
அமெரிக்கா-ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையை எட்டியுள்ள நிலையில், இப்புதிய ஏவுகணை வீச்சு வளைகுடா பகுதியில் மீண்டும் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



