
கெரிக், பேராக், ஜூன்-17- பேராக் கெரிக் (Gerik) கம்போங் பொங்கோர் (Kampung Bongor) பகுதியில் சுற்றித்திரிந்த 12 காட்டு யானைகளை, பேராக் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறையான பெரிஹிலித்தான் வெற்றிகரமாக வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.
கிராம மக்களின் புகாரைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை முதல், கட்டம் கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
“இண்டா” (Indah) மற்றும் “சூரியா” (Suria) என்ற இரண்டு பெண் யானைகளின் உதவியுடன், யானைகள் மனித குடியிருப்புகளிலிருந்து தொலைவில் உள்ள இயற்கை வாழ்விடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
மாற்றப்பட்ட யானைகளில் குட்டி யானைகள் முதல் சுமார் 35 வயது வரை உள்ள பெரிய யானைகளும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, உலு பேராக் பகுதியில் மனிதர்–யானை மோதல் நீண்டகால பிரச்சினையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தீர்க்க, கெரிக்கில் யானைகள் சரணாலயம் அமைக்கும் யோசனையை பேராக் மாநில அரசு பரிசீலித்து வருகிறது.



