
அம்பாங், ஜூன்-19-அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தினால் (MPAJ) பிடிக்கப்பட்ட 5 தெரு நாய்களைக் கொல்வதற்கு அதாவது ‘கருணைக்கொலை’ செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, Selangor Furry Future விலங்கு நல அமைப்பு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிடிக்கப்பட்ட அந்த 5 நாய்களையும் தங்களின் செமஞே காப்பகத்தில் வைத்து பராமரிக்கத் தயாராக இருப்பதாக அந்த அமைப்பின் தலைவர் எஸ். ஷஷிகுமார் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நகராண்மைக் கழகத்தின் சட்ட விதிகளின்படி, அந்த நாய்களை விடுவிக்க 5,000 ரிங்கிட் அபராதம் அல்லது மீட்புக் கட்டணம் செலுத்த வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்துவதாக அவர் கூறினார்.
இன்று வெள்ளிக்கிழமைக்குள் இந்தத் தொகை செலுத்தப்படாவிட்டால், அந்த 5 நாய்களும் ஊசி மூலம் கொல்லப்படும் என நகராண்மைக் கழக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொது மக்களின் நன்கொடைகளை மட்டுமே நம்பியிருக்கும் தங்களுக்கு இந்த 5 ஆயிரம் ரிங்கிட்டை உடனடியாகத் திரட்டுவது மிகவும் கடினம் என்றும், மனிதாபிமான அடிப்படையில் கட்டணத்தை இரத்துச் செய்து நாய்களின் உயிரைக் காப்பாற்ற அனுமதிக்குமாறும் சசிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.



