
துவாரான், ஜூன் -29-சபா, துவாரான் நகரில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மோதல் தொடர்பான பழைய வீடியோ ஒன்று, தற்போது சமூக ஊடகங்களில் மீண்டும் பரவி வருவதாக போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள துவாரான் மாவட்ட போலீஸ், இந்த மோதல் அண்மையில் நடந்தது அல்ல என்றும், கடந்த பிப்ரவரி மாதமே நடந்து முடிந்த ஒரு பழைய சம்பவம் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
அதில், மதுபோதையில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதமாகும்; ஆயுத பயன்பாடோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.
இது தொடர்பான விசாரணை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பழைய வீடியோவை மீண்டும் சமூக ஊடகத்தில் பதிவேற்றி, பொது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நபரும் விசாரணைக்கு உதவ அழைக்கப்பட்டுள்ளார்.
எனவே, பொது மக்கள் மத்தியில் தேவையில்லாத அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



