
கூச்சிங், ஜூன் 29 – மிரி கடற்பகுதியில் அமைந்துள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையத்தின் காற்றோட்டக் குழாய் மீது மின்னல் தாக்கியதில், எரிவாயு குழாய் பாதிக்கப்பட்டு வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது.
சூழ்நிலையைக் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரவும், ஆபத்துகளைத் தவிர்க்கவும் வால்வை மூடுவதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் பேச்சாளர் தெரிவித்தார். இச்சம்பவத்தால் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்பதோடு தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.
இச்சம்பவத்தை பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் உறுதிப்படுத்தியதுடன், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படியே அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் கிடைக்கவில்லையென மிரி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் பர்ஹான் லீ அப்துல்லா ( Mohd Farhan Lee Abdullah ) குறிப்பிட்டார்.
நடுக் கடலில் நிகழ்ந்த இந்த வெடிப்புச் சம்பவத்தின் 26 வினாடிகள் கொண்ட காணொளி, நேற்று மாலை சமூக ஊடகங்களில் வைரலானது.



