
கோலாலம்பூர், ஜூலை-4 – எதிர்வரும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், இந்தியர்களின் வாக்குகள் சிதறும் அபாயம் இருப்பதாக, மூத்த அரசியல் ஆய்வாளர் டத்தோ எம். பெரியசாமி எச்சரித்துள்ளார்.
56 சட்டமன்றத் தொகுதிகளில் 18 இந்திய வேட்பாளர்கள் பல்வேறு கட்சிகளின் சார்பாகக் களமிறங்கியுள்ளனர்.
ம.இ.கா, MIPP, DAP, PKR மற்றும் சுயேட்சைகள் எனப் பல தரப்பினர் போட்டியிடுவதால், இந்திய வாக்காளர்களின் வாக்குகள் பெருமளவு சிதறும் சூழல் உருவாகியுள்ளது.
இது குறித்துப் பேசிய சமூக, பெரியசாமி, புதிய அரசியல் கட்சிகளின் வருகை மற்றும் இன அடிப்படையிலான வாக்குப்பதிவு ஆகியவை இந்தியர்களின் பலத்தைப் பாதிக்கலாம் என சுட்டிக்காட்டினார்.
மேலும், பல இந்திய வாக்காளர்கள் இம்முறை வாக்களிப்பதில் ஆர்வம் காட்டாத மனப்போக்குடன் இருப்பது, இந்திய வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவினாலும், வாக்குச் சிதறல் காரணமாக வேட்பாளர்கள் எதிர்நீச்சல் போட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பாரிசான் நேசனல் கூட்டணி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க முயலும் இந்தச் சூழலில், இந்திய வாக்குகள் எந்தக் கட்சிக்குச் சாதகமாக அமையும் என்பது தேர்தல் முடிவிலேயே தெரியவரும் என பெரியசாமி கூறுகிறார்.



