
கோலாலம்பூர், ஜூலை-17-நாட்டின் டேக்ஸி தொழிலை வலுப்படுத்துவதற்காக, ‘தேசிய மடானி டேக்ஸி புதுப்பித்தல் திட்டத்தின்’ கீழ், நிதி அமைச்சிடமிருந்து கூடுதல் 10 மில்லியன் ரிங்கிட் நிதியை போக்குவரத்து அமைச்சு பெற்றுள்ளது.
அமைச்சர் அந்தோணி லோக் அதனை உறுதிப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், பழைய டேக்ஸிகளை மாற்றி புதிய வாகனங்களை வழங்குவதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதும், டேக்ஸி ஓட்டுநர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவதுமாகும்.
நேற்றைய நிகழ்வில் ஓட்டுநர்களுக்கு ஏற்ற நிதி உதவித் திட்டங்கள் மற்றும் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
Proton நிறுவனத்தின் S70 மாடல் வாகனங்களுக்கான நிதி உதவி, AirAsia Ride மூலமான கூடுதல் வருமான வாய்ப்புகள், அத்துடன் PERKESO மற்றும் APAD மூலம் சமூகப் பாதுகாப்பு மற்றும் அனுமதிப் பத்திரம் தொடர்பான உதவிகள் வழங்கப்படுகின்றன.
மக்களின் நலனை மையமாகக் கொண்ட, நிலையான மற்றும் உள்ளடக்கிய பொதுப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் மடானி அரசாங்கத்தின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த முயற்சி வெளிப்படுத்துகிறது.
ஆர்வமுள்ள ஓட்டுநர்கள் மேல் விவரங்களுக்கு ‘go.gov.my’ இணையதளத்தைப் பார்வையிடலாம்.



