
கூலிம், ஜூலை-22 – பல்பொருள் அங்காடியிலிருந்து மில்லோ (Milo) மற்றும் ஷாம்புக்களை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு, கூலிம் நீதிமன்றம் ஏழு நாட்கள் சிறைத் தண்டனை விதித்தது.
49 வயதான அந்த ஆடவர், லுனாஸிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியிலிருந்து மொத்தம் 252.60 ரிங்கிட் மதிப்புள்ள மில்லோ பாக்கெட்டுகளையும் ஷாம்புக்களையும் கடந்த ஜூலை 15ஆம் தேதி திருடியதாக குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜரான அவர், குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அமலுக்கு வரும் வகையில் ஏழு நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணையின்போது, குற்றவாளி திருமணமானவர், இரண்டு பிள்ளைகளின் தந்தை மற்றும் தற்போது வேலை தேடி வருகிறார் என்றும், திருடப்பட்ட பொருட்கள் குடும்பத் தேவைக்காக எடுக்கப்பட்டவை என்றும் அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், அரசு தரப்பு, அந்தப் பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கும் நோக்கில் அவர் திருடியதாக தகவல் இருப்பதாகக் கூறி, உரிய தண்டனை வழங்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது.



