
மலாக்கா, ஆகஸ்ட்-10-மலேசியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சமயத் தலைவர்கள், கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், இளைஞர் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள், மலாக்காவில் நடைபெற்ற அனைத்துலக சமய நல்லிணக்க அமைதி மாநாடு – IIPC 2026-ல் கலந்து கொண்டனர்.
சமயங்களுக்கு இடையிலான புரிந்துணர்வை வலுப்படுத்துவது மற்றும் சமூக அமைதியை மேம்படுத்துவது குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டை மலாக்கா ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மாநாட்டில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங், மலேசியாவின் சமய, கலாச்சார மற்றும் இனப் பன்முகத்தன்மை மோதலுக்கான காரணமாக அல்லாமல், நாட்டின் பலமாகக் கருதப்பட வேண்டும் என்றார்.
உண்மையான தேசக் கட்டமைப்பு என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புடன் மட்டும் நின்றுவிடாமல், மக்களிடையே நம்பிக்கை, சமூக ஒற்றுமை மற்றும் அனைவரும் ஒரே நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வையும் வலுப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
மேலும், சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் என்பது ஒருவரின் மத நம்பிக்கையை மாற்றுவதற்கோ விட்டுக்கொடுப்பதற்கோ அல்ல; மாறாக வேறுபாடுகளை மதித்து பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கான தளம் என்றும் அவர் வலியுறுத்தினார்.



