
பாலிங், ஆகஸ்ட்-11-கெடா, பாலிங் மருத்துவமனையில் நேற்று தீ எச்சரிக்கை மணி ஒலித்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. அம்மருத்துவமனை வளாகத்திலுள்ள கட்டிடமொன்றின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகச் சமூக ஊடகங்களில் முன்னதாக தகவல்கள் பரவியிருந்தன.
தீ விபத்து குறித்து மாலை 6.44 மணிக்குத் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக பாலிங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவரும், உதவித் தீயணைப்பு கண்காணிப்பாளருமான Zulkhairi Mat Tanjil தெரிவித்தார்.
தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்ததில் அங்கு உண்மையில் எந்தத் தீ விபத்தும் ஏற்படவில்லை என்பதும், தீ எச்சரிக்கை மணி தானாகவே ஒலி எழுப்பியதும் தெரிய வந்தது. தீ விபத்து ஏதும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, இரவு 8.56 மணிக்கு அனைத்தும் சுமூகமாக முடிவடைந்த்தாக அவர் கூறினார்.
இதனிடையே, தீ எச்சரிக்கை மணி ஒலித்ததற்கான காரணத்தைக் கண்டறியும் சோதனைகளைத் தீயணைப்புத் துறை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக பாலிங் மாவட்டக் காவல் துறைத் தலைவர் Brandon Richard Joe குறிப்பிட்டார்.



