
குளுவாங், ஆகஸ்ட்.14- ஜோகூரில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 55.1-வது கிலோமீட்டரில் குளுவாங் அருகே வேனும் லாரியில் மோதிக் கொண்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தகவல் கிடைத்ததும் , நள்ளிரவு 12.54 மணியளவில் ஐந்து பணியாளர்களை ஏற்றியிருந்த தீயணைப்பு, மீட்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக Rengggam தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கைப் பிரிவு அதிகாரி Shoromi Salih தெரிவித்தார்.
அவ்விபத்தில் Toyota வேனைச் செலுத்திய பெண், வாகனத்தின் ஓட்டுநர் பகுதியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தைச் சென்றடையும் முன்னரே காயமடைந்த ஐவர் பொதுமக்களின் உதவியுடன் வாகனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். அவர்களில் மூவர் சிறார்கள். ஒருவர் மாற்றுத் திறனாளி. மற்றொருவர் ஆடவர்.
விபத்தில் பலியான பெண்ணின் சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. காயமடைந்த அனைவருக்கும் மருத்துவப் பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர்.
இவ்வேளையில் Isuzu லாரியை ஓட்டிய ஆண் ஓட்டுநர் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக Shoromi கூறினார்.



