
போர்ட்கிள்ளான், ஆகஸ்ட்.14-அரச மலேசிய சுங்கத்துறையின் சிலாங்கூர் அமலாக்கப் பிரிவு 52,500 ரிங்கிட் பெறுமானமுள்ள பாலியல் பயன்பாட்டு உபகரணங்களைக் கைப்பற்றியுள்ளது.
இறக்குமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு சட்டப்பூர்வமான பொருட்களுடன் சேர்த்து அவை மறைத்து வைக்கப்பட்டிருந்த விவரம் அம்பலமானதாக சிலாங்கூர் சுங்கத் துறை இயக்குனர் Noraidah Ishak தெரிவித்தார்.
மே 26 ஆம் தேதி Northport சுயேட்சை வணிக மண்டலத்தில் கொள்கலன் ஒன்றில் அந்த 1,240 பாலியல் பயன்பாட்டுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை முற்றிலும் தடை செய்யப்பட்ட பொருட்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அச்சம்பவம் 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அப்பொருட்கள் உள்ளூர் சந்தைக்காகவே கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது. அதில் , தொடர்புடைய நபர்களைக் கண்டறியும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மற்றொரு நிலவரத்தில், ஜூன் 3 முதல் ஜூன் 10 வரையிலான காலகட்டத்தில், வரிகள் மற்றும் தீர்வைகள் உட்பட 37.56 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 48.78 மில்லியன் ‘வெள்ளை’ சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அச்சிகரெட்டுகள் ஆசிய நாட்டுத் தயாரிப்பாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இவ்வேளையில், கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்க விரும்புவோர், சுங்கத் துறைக்கு அழைக்கலாம் அல்லது அருகிலுள்ள சுங்க அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என Noraidah Ishak தெரிவித்தார்.



