
கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – தையல் துறையில் 38 ஆண்டுகளாக பயணித்து வரும் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.பி. சரவணன், தமிழ்நாட்டின் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்ற உலக தையல் தொழிலாளர் மாநாட்டில் ‘சிறந்த ஐகோனிக் விருது 2026’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 2,500 தையல் தொழிலாளர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், மலேசியாவிலிருந்து இவ்விருதைப் பெற்ற ஒரே நபராக சரவணன் இடம்பெற்றுள்ளார். தொழில்முனைவில் இவரது சாதனை மற்றும் தனித்துவமான பங்களிப்பை அங்கீகரித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.பி. சாரா கேக் எண்ட் டைலரிங் நிறுவனத்தின் நிறுவுநரான சரவணன், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட தையல் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தனது அனுபவத்தையும் தொழில்நுட்ப அறிவையும் அடுத்த தலைமுறையினருடன் பகிர்ந்து வருகிறார்.
“38 ஆண்டுகால தையல் பயணத்தில் கிடைத்த முதல் அங்கீகாரம் இது. என்னிடம் கற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் முன்னேற்றமே எனது மிகப்பெரிய வெற்றி,” என சரவணன் மகிழ்ச்சி தெரிவித்தார்.
38 ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்தை தனது தையல் குருமார்களுக்கு சமர்ப்பிப்பதாகக் கூறிய இவர், அடுத்த தலைமுறை தையல் கலைஞர்களை உருவாக்கும் தனது பயணம் தொடரும் என்றும் தெரிவித்தார்.



