
கூலாய், ஆகஸ்ட்-23 – விபத்து ஏதோ நடந்துவிட்டதோ என நினைத்த வாகனமோட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சி…
காரணம் உண்மையில் நடந்தது என்னவோ… சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக நெடுஞ்சாலையே மறிக்கப்பட்டது தான்.
பொது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் ஜோகூர், கூலாயில் உள்ள மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலமான Linkedua நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது.
வைரலான 33 வினாடி வீடியோவில், தங்களது நண்பர்கள் ஆபத்தான முறையில் பந்தயத்தில் ஈடுபடுவதற்காக சிலர் முக்கிய பாதையை வேண்டுமென்றே மறித்து நின்றிருப்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்த பொறுப்பற்ற செயல், பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், அவசர வாகனங்களின் போக்குவரத்தையும் தடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் கூலாய் மாவட்ட போலீஸார், இதில் தொடர்புடைய நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அனுமதியின்றி பந்தயம் நடத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் போலீஸைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.



