
ஈப்போ, செப்டம்பர்-5,பேராக் மாநில குடிநுழைவு இலாகா அதிகாரிகள் ஈப்போ அருகே உள்ள கதவு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு பணியாற்றிய வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.
அதிகாரிகளிடம் பிடிபடாமல் இருக்க வேலியை ஏறிக் குதிக்க முயன்றதிலும், தொழிற்சாலைப் பகுதிகளில் ஒளிய முயன்றதிலும் சில தொழிலாளர்களுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டன.
முறையான வேலை பெர்மிட் இல்லாதது, பயண அனுமதிப் பத்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் மேல் தங்கியிருந்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மர ஆலைகள், கையுறைத் தொழிற்சாலைகள், உணவங்காடி நிலையங்கள் போன்ற இடங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
305 தொழிலாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, அவர்களில் வங்காளதேசிகள், மியன்மார் – வியட்நாம் நாட்டவர்கள் என 175 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் மேல் நடவடிக்கை மற்றும் விசாரணைக்காகக் குடிநுழைவு இலாகா அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.



