
வாஷிங்டன், செப்டம்பர்-13-மலேசியாவில் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு, செய்தி இணையத் தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளை விட சமூக வலைத் தளங்களே முதன்மை ஆதாரமாக மாறியுள்ளதாக பிரபல Reuters Institute அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வின்படி, 69 விழுக்காட்டுக்கும் அதிகமான மலேசியர்கள் செய்திகளுக்காக சமூக வலைத் தளங்களையே முதன்மையாகப் பயன்படுத்துகின்றனர்.
செய்தி இணையத் தளங்களை 42 விழுக்காட்டினரும், தொலைக்காட்சியை 36 விழுக்காட்டினரும் பயன்படுத்துகின்றனர்.
அதே சமயம் அச்சு ஊடகங்களின் பயன்பாடு 14 விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது.
செய்திகளுக்காக 58 விழுக்காட்டுடன் வாட்சப் முதலிடத்தில் உள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் டிக் டோக் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இவ்வேளையில், கைரி ஜமாலுடின் மற்றும் இட்ரிஸ் ஜாலா போன்ற பிரபலங்களின் போட்காஸ்ட் (podcast) மற்றும் செய்தி சார்ந்த படைப்பாளர்களின் உள்ளடக்கங்களை 32 விழுக்காட்டினர் பார்வையிடுகின்றனர்.
அதே சமயம், மலேசியாவில் செய்திகள் மீதான ஒட்டுமொத்த பொதுநம்பிக்கை 30 விழுக்காடாக உள்ளது.
இது உலகளாவிய சராசரியை விட 7 விழுக்காடுக் குறைவாகும்.



