
ஈப்போ, செப்-16-பேரா, ஈப்போவில் உள்ள தங்குமிட வசதியுடன் கூடிய இடைநிலைப் பள்ளியொன்றில் Influenza A kluster கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, 46 மாணவர்களுக்கு Influenza பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 14-ஆம் தேதி வரை அறிகுறிகள் காணப்பட்ட 61 மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அது தெரிய வந்ததாக மாநில மனித வளம், சுகாதாரம், இந்தியர் விவகாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுத் தலைவர் அ. சிவனேசன் தெரிவித்தார்.
மேலும், 14 மாணவர்களுக்கு மேல் சுவாசக்குழாய் தொற்றும், ஒருவருக்கு கண் அழற்சியும் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆறு மாணவர்களிடமிருந்து ஆய்வு பரிசோதனைக்காக நாசி-தொண்டை சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை அறிகுறிகள் தென்பட்ட 57 மாணவர்களைப் பள்ளி நிர்வாகம் முதலில் அருகிலுள்ள மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்றது. நேற்று மேலும் 39 மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுவரையிலான நிலவரப்படி, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து மாணவர்களும் சீரான உடல்நிலையில் உள்ளனர். புதிய பாதிப்புகளையும் ஆய்வு பரிசோதனை முடிவுகளையும் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தவும், அவர்களின் உடல்நிலை சீராகும் வரை வீட்டில் சுயத் தனிமையில் இருக்கச் செய்யவும் சம்பந்த்கப்பட்ட பள்ளிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல், இருமல் மற்றும் தும்மலின் போது முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.
Influenza அறிகுறிகள் உள்ள மாணவர்கள் குணமடையும் வரை பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பெற்றோர்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. அறிகுறிகள் நீடித்தாலோ அல்லது தீவிரமடைந்தாலோ மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



