
கோத்தா கினபாலு, செப்-16–இந்தோனேசியா, Kalimantanனில் வெப்பப் புள்ளிகளின் எண்ணிக்கை 808-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அந்நாட்டுக்கு உதவ மலேசியா முன்வந்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை மற்றும் எல் நினோ காரணமாக வெப்பம் மற்றும் வறண்ட வானிலை நிலவுகிறது. எனவே வெப்பப் புள்ளிகள் அதிகரிப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Datuk Seri Arthur Joseph Kurup தெரிவித்தார்.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இந்தோனேசிய அரசாங்கத்திற்கு உதவ மலேசியா அதிகாரப்பூர்வமாக முன்வந்துள்ளது. அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சருடன் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வான்வழியாக நீரைப் பாய்ச்சி தீயை அணைக்கும் விமானங்கள் மற்றும் மனிதவள உதவி உள்ளிட்டவற்றை வழங்க மலேசியா தயாராக இருக்கிறது. புகைமூட்டம் எல்லைகளைக் கடந்து அண்டை நாடுகளையும் பாதிக்கும் பிரச்சினை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இவ்வேளையில், நாட்டில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்தால், வெளிப்புற நிகழ்வுகளை உட்புற அரங்குகளுக்கு மாற்ற அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் சுகாதாரத்தைக் கருத்தில் கொள்வது அவசியம் என Arthur Joseph Kurup கூறினார்.
சரவாக், கூச்சிங்கில் நடைபெறவிருந்த மலேசிய தினக் கொண்டாட்டங்கள் ஏற்கனவே உட்புற அரங்கிற்கு மாற்றப்பட்டதுடன், வானவேடிக்கை நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டன. புகைமூட்ட நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப வெளிப்புற நிகழ்வுகள் தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.



