
ஈப்போ, செப்டம்பர்-20,ஈப்போ, தாமான் டேசா தம்புனில் உள்ள இரண்டு மாடி வீட்டொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்; மற்றொருவர் உயிர் தப்பினார்.
உயிரிழந்தவர்கள் முதிய தம்பதியர் மற்றும் அவர்களின் பேரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் முறையே 70 வயது Raja Ahmad Raja Ali, 70, 64 வயது Zaitun Mohamed மற்றும் 18 வயது Nik Abdurrahman Azimin Harith Helal ஆவர்.
அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இருப்பினும், தீ மளமளவென பரவியதால், வீட்டின் மேல் தளத்தில் இருந்த மூவரும் வெளியேற முடியாமல் தீயில் சிக்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலங்கள் சவப் பரிசோதனைக்காக ஈப்போ, ராஜா பெர்மாய்சூரி பைனூன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்து தீயணைப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



