
டியூஷன் மையங்களின் உரிமைக் கட்டமைப்பு தொடர்பான தற்போதைய நிபந்தனைகளை மறு ஆய்வு செய்வதற்கான பரிந்துரையை, அடுத்த வாரம் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கொள்கை நூலில், டியூஷன் மையங்களின் உரிமைக் கட்டமைப்பு தொடர்பான விதிகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
எனினும், உரிமத்தைப் புதுப்பிக்கும்போது டியூஷன் மையங்கள் 30 விழுக்காடு பூமிபுத்ரா பங்குடைமை நிபந்தனையை பூர்த்திச் செய்ய வேண்டும் என வெளியான தகவல்கள் குறித்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் எழுந்துள்ளது.
குறிப்பாக ம.இ.கா தேசிய வியூக இயக்குநர் டத்தோ சி. சிவராஜ், இந்த நிபந்தனை தற்போதுள்ள டியூஷன் மையங்களுக்கும் கட்டாயமாகுமா என்றும், 2027-ஆம் ஆண்டு உரிமம் புதுப்பிப்பதற்கு முன் அவகாசம் வழங்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், குழந்தைகளின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்காக அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சு கூறியுள்ளது.



