
தேசிய முன்னணியில் புதிய உறுப்புக் கட்சிகளை இணைத்திட அக்கூட்டணியின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்படும் தேவை இருப்பதாக அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹமாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
அதற்கு அனைத்துக் கட்சிகளும் தேசிய முன்னணி கூட்டத்தில் ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
நேற்றைய கிம்மா ஆண்டுக் கூட்டத்தில் அக்கட்சி தங்களை தேசிய முன்னணியில் உறுப்புக் கட்சியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து அவர் அவ்வாறு கூறினார்.
தற்போது அனைத்துக் உறுப்புக் கட்சிகளும் முழுமையான இணக்கம் தெரிவித்தால் மட்டுமே புதிய கட்சியை இணைத்துக் கொள்ள முடியும்.
அந்த வகையில் பல ஆண்டுகளாக தோழமைக் கட்சிகளாக உள்ள ஐபிஃஎப், கிம்மா, மக்கள் சக்தி போன்றவை முழு உறுப்பியம் பெறாத கட்சிகளாக உள்ளன.
கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பிறகு அக்கூட்டணியில் இருந்து வெளியேறிய PPP கட்சி மீண்டும் இணைக்கப்பட்டது.
இவ்வேளையில் ம.இ.கா எந்த ஒரு புதிய கட்சியின் இணைப்புக்கும் மறுப்பு தெரிவிக்காது என அதன் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.



