![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/MixCollage-25-Apr-2024-04-16-PM-7041.jpg)
கோலாலம்பூர், ஏப்ரல் 25 – ஊழியர் சேம நிதி வாரியத்தின் கணக்கு, மூன்று கணக்குகளாக கட்டமைக்கப்படவுள்ளது.
மே மாதம் 11-ஆம் தேதி முதல் அப்புதிய முறை அமலுக்கு வருவதாக, ஊழியர் சேம நிதி வாரியம், அறிவித்துள்ளது.
அதன் வாயிலாக, ஊழியர் சேம நிதி வாரியத்தின், 55 வயதுக்கு உட்பட்ட உறுப்பினர்களின் அனைத்து கணக்குகளும், ஓய்வூதிய கணக்கு, வளமான கணக்கு மற்றும் “ப்ளெக்சிபிள்” எனப்படும் தளர்வுக் கணக்கு என மூன்று கணக்குகளாக மறுசீரமைக்கப்படும்.
ஓய்வூதிய கணக்கில் இருக்கும் தொகையை, ஒருவர் பணி ஓய்வுப் பெறும் போது மட்டும் தான் திரும்ப பெற முடியும். வளமான கணக்கில் இருக்கும் தொகையை, குறிப்பிட்ட சில தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.
“ப்ளெக்சிபிள்” கணக்கில் இருக்கும் சேமிப்பை, உறுப்பினரின் தேவைக்கேற்ப எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம்.
தற்சமயம், நடைமுறையில் இருக்கும் ஒருவரது முதலாம் இரண்டாம் கணக்குகளில் இருக்கும் தொகை, முறையே ஓய்வூதியம், மற்றும் வளமான கணக்குகளுக்கு மாற்றப்படும் வேளை ; “ப்ளெக்சிபிள்” கணக்கு சுழியத்திலிருந்து தொடங்குமென, ஊழியர் சேம நிதி வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அதனால், மே 11-ஆம் தேதிக்கு பின்னர், ஒருவரது ஊழியர் சேம நிதி சந்தாவின் 75 விழுக்காட்டு பிடித்தம் ஓய்வூதிய கணக்கிற்கும், 15 விழுக்காடு வளமான கணக்கிற்கும், எஞ்சிய பத்து விழுக்காடு ப்ளெக்சிபிள் கணகிலும் சேர்க்கப்படும்.
EPF சந்தாதாரர்களின், குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால நிதித் தேவைகளையும், ஓய்வு பெறுவதற்கான எதிர்காலத் தேவைகளையும் சமநிலைப்படுத்தும் முயற்சியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, ஊழியர் சேம நிதி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மாட் சுல்கர்னைன் ஒன் கூறியுள்ளார்.