கோலாலம்பூர், ஜனவரி 2 – EPF – ஊழியர் சேம நிதி வாரியம், இவ்வாண்டு 5.5 விழுக்காட்டிலிருந்து 6.5 விழுக்காடு வரையிலான இலாப ஈவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது, 2022-ஆம் ஆண்டு, வழக்கமான சேமிப்புக்கு வழங்கப்பட்ட 5.35 மற்றும் ஷரியா சேமிப்புக்கு வழங்கப்பட்ட 4.75 விழுக்காட்டு இலாப ஈவை காட்டிலும் அதிகமாகும்.
EPF ஊழியர் சேம நிதி வாரியத்தின், நடப்பு காலாண்டு செயல்திறனை அடிப்படையாக கொண்டு, அந்த நேர்மறையான கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக, யூனிகேல் பிசினஸ் ஸ்கூல் பொருளாதார ஆய்வாளர் இணை பேராசிரியர் டாக்டர் ஜமி சுல்ஹாஸ்மி அப்துல் ரசிட் தெரிவித்தார்.
EPF, 1.1 டிரில்லியன் அல்லது 110 ஆயிரம் கோடி ரிங்கிட் சொத்துகளுடன் மிகவும் நிலையான பொருளாதார சூழலை கொண்டுள்ளது.
அதனால், அந்த தேசிய ஓய்வூதிய நிதி அமைப்பு, முதலீடுகளை தேர்வுச் செய்வதிலும், வெளி நிதி மேலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதிலும் கூடுதல் தனித்தன்மைகளை கொண்டுள்ளது.
அதோடு, கடந்தாண்டு தொடர்ந்து நேர்மறையான வளர்ச்சியை பதிவுச் செய்த நாட்டின் பொருளாதார சூழலை தொடர்ந்து, இவ்வாண்டு EPF தனது சந்தாதாரர்களுக்கு மிகச் சிறந்த இலாப ஈவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.