![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/kl58-10062024-diesel_4257676_20240611090902.jpeg)
கோலாலம்பூர், ஜூன் 12 – SKDS எனப்படும் மானியம் பெற்ற டீசல் கட்டுப்பாட்டு முறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட, ஆனால் இன்னும் ப்ளீட் கார்டைப் (Fleet Card) பெறாத சரக்கு வாகனங்களின் உரிமையாளர்களுக்கு, ரொக்கப் பணத்தை திரும்பச் செலுத்தும் இடைக்கால அணுகுமுறையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
மூன்று ரிங்கிட் 35 சென்னுக்கு விற்கப்படும் டீசலின் புதிய சில்லறை விலைக்கும், அரசாங்கத்தின் மானியம் வழங்கப்பட்ட இரண்டு ரிங்கிட் 15 சென் விலைக்கு இடையில் இருக்கும் வேறுபாட்டை ஈடு செய்யும் வகையில் அந்த தற்காலிக அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, இரண்டாவது நிதி அமைச்சர் செனட்டர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா (Senator Datuk Seri Amir Hamzah), ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
குறிப்பிட்ட சில சரக்கு வாகனங்களுக்கு அந்த இலக்கிடப்பட்ட உதவித் தொகை முறையாக சென்றடைவது உறுதிச் செய்யப்படுமென, ஹம்சா சொன்னார்.
அதனால், சம்பந்தப்பட்ட தரப்பினர், மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் வகையில், தங்கள் பொருட்களின் விலையை அதிகரிக்க நியாயமான காரணம் எதுவும் இருக்க முடியாது.
அதே சமயம், டீசல் விலையேற்றத்தால் சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தற்காலிகமாக ரொக்கப் பணத்தை திரும்ப செலுத்தும் அணுகுமுறை மேற்கொள்ளப்படுவதாவும், ஹம்சா தெளிவுப்படுத்தினார்.
அதன் வாயிலாக, SKDS மானியம் பெற்ற டீசல் கட்டுப்பாட்டு முறையின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட, ஆனால் இன்னும் ப்ளீட் கார்டைப் (Fleet Card) பெறாத சரக்கு வாகனங்களின் உரிமையாளர்கள், ஜூலை முதலாம் தேதி தொடங்கி, புடி மடானி அகப்பக்கம் வாயிலாக ரொக்கப் பணத்தை திரும்ப பெற விண்ணப்பிக்கலாம்.
அவ்வாறு விண்ணப்பம் செய்பவர்கள், தணிக்கை நோக்கத்திற்காக, டீசல் கொள்முதல் ரசீதுகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.
அதே சமயம், ஜூன் 30-ஆம் தேதிக்குள், டீசல் உதவித் தொகையை பெற தகுதியானவர்கள் என உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவின அமைச்சின் அங்கீகாரத்தையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
அவ்வாறு தகுதி பெற்ற சரக்கு வாகன உரிமையாளர்கள், http://mysubsidi.kpdn.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக, ப்ளீட் கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம்.