![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/51508279457_96e6290e4c_k.jpg)
கூச்சிங், பிப்ரவரி 24 – தனது ‘இலவச இருக்கை’ இயக்கத்திற்கு இவ்வட்டார சுற்றுப் பயணிகளிடம் இருந்து அமோக வரவேற்புக் கிடைத்திருப்பதால், ஏர் ஏசியா இன்று முதல் கூடுதலாக பத்து லட்சம் ‘சலுகை’ இருக்கைகளை வழங்குகிறது.
கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட அச்சலுகை இயக்கம் இறுதிக் கட்டத்தை நெருங்கும் நேரத்தில் அதற்கான வரவேற்பு ஆச்சரியமளிக்கும் வகையில் இருப்பதாக அந்த மலிவுக் கட்டண விமான நிறுவனம் கூறியது.
மலேசியாவுக்குள் பினாங்கு, ஜொகூர் பாரு, மீரி போன்ற இடங்களுக்கான ஒரு வழிப் பயணத்தை வெறும் 28 ரிங்கிட்டில் மேற்கொள்ள அந்த ‘Free Seats சலுகை வகைச் செய்கிறது.
அதே கிராபி, பாலி, மேடான் போன்ற ஆசியானின் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வெறும் 83 ரிங்கிட் தொடங்கி ஒரு வழிப் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அப்படியே Almaty, Hangzhou, Delhi போன்ற ஆசிய நகரங்களுக்கும், கண்டம் விட்டு கண்டம் போகும் ஒரு வழிப் பயணத்திற்கும் 299 ரிங்கிட்டை தொடக்கக் கட்டணமாக ஏர் ஏசியா நிர்ணயித்திருக்கிறது.
இவ்வாண்டு இந்த Free Seats இயக்கம் தொடங்கியது முதல் கிடைத்து வரும் வரவேற்பு மலைக்கச் செய்யும் வகையில் இருப்பதாக ஏர் ஏசியா விமான குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி போ லிங்கம் பெருமிதம் தெரிவித்தார்.
சலுகை விலையிலான டிக்கெட் விற்பனை தொடங்கிய முதல் 72 மணி நேரங்களிலேயே பினாங்கு, கிராபி, ஹோ சின் மின் சிட்டி உள்ளிட்ட முதன்மை சுற்றுலா தலங்களுக்கான ஒரு வழிப் பயண டிக்கெட்டுகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததாக அவர் சொன்னார்.
இந்த கூடுதல் 10 லட்சம் டிக்கெட்டுகள் மூலம், வரும் மாதங்களில் லட்சக்கணக்கானோரை அவர்களின் கனவு இடங்களுக்கு, குறைந்தக் கட்டணத்தில் ‘பறக்கச்’ செய்வதில் ஏர் ஏசியா மகிழ்ச்சிக் கொள்வதாக லிங்கம் தெரிவித்தார்.
இவ்வாண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் அடுத்தாண்டு ஜூன் மாதம் 18-ஆம் தேதி வரைக்குமான பயண டிக்கெட்டுகளுக்கு, இப்போதே விரைந்து முன்பதிவு செய்துக் கொள்ளுமாறும் பயணிகளை அவர் கேட்டுக் கொண்டார்.