![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-24-at-18.09.17.jpg)
சிரம்பான், மே 25 – கிள்ளான் பள்ளத்தாக்கில் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் Hilux வாகனங்களை திருடும் கும்பல் முறியடிக்கப்பட்டதோடு மூன்று ஆடவர்கள் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்தனர். அதோடு நான்கு சக்கர Hilux வாகனங்களில் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டதாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ Ahmad Dzaffir Mohd Yussof தெரிவித்தார். அக்கும்பல் திருடப்படும் அந்த வாகனங்களின் எண் பட்டைகளை மாற்றி போலி எண் பட்டைகளை பயன்படுத்தி வந்துள்ளது.
சிரம்பான் மாவட்ட குற்றப் புலனாய்வுத்துறை, நெகிரி செம்பிலான் குற்றப்புலனாய்வுத்துறையுடன் இணைந்து மே 21ஆம் தேதி சிலாங்கூர், செராஸ் மற்றும் சுங்கைப் பூலேவில் மேற்கொண்ட நடவடிக்கையில் நெகிரி செம்பிலானில் Hilux வாகனம் திருடப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 30 முதல் 43 வயதுடைய உள்நாட்டைச் சேர்ந்த மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக Ahmad Dzaffir வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
வீடமைப்பு பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அந்த வாகனங்களை சிறப்பு கருவியை பயன்படுத்தி அதன் இயந்திரத்தை இயக்கி அவர்கள் திருடிவந்துள்ளனர். இதன்வழி நெகிரி செம்பிலான், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் 750 ,000 ரிங்கிட் மதிப்புள்ள 5 Hilux வாகனங்கள் திருடப்பட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டதாக Ahmad Dzaffir கூறினார்.