
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது துணைவியார் டத்தோ ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் ஆகியோர், தேசிய இருதய சிகிச்சைக் கழகமான IJN-னில், துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் மற்றும் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஆகியோரை நேரில் சந்தித்தனர்.
கடந்த வாரம் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஃபாடில்லா யூசோஃப், தற்போது நல்ல உடல்நலத்துடன் மீண்டு வருகிறார்; மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, இருதயத் துடிப்பு சீரற்ற நிலைக்காக Pacemaker எனப்படும் இதயமுடுக்கி பொருத்தும் சிகிச்சை பெற்றுள்ள முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி, தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
Keluarga Malaysia திட்டம் தொடர்பான விவகாரத்தில் MACC-யில் வாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட இருதயப் பிரச்னைக் காரணமாக இஸ்மாயில் சப்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அவரது நீதிமன்ற வழக்கு விசாரணைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இரு தலைவர்களும் விரைவில் குணமடைந்து, தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாகப் பிரதமர் அன்வார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



