செப்பாங், ஏப்ரல் 25 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஒன்றாவது மற்றும் இரண்டாவது முனையங்களில், “மைக்ரோமொபிலிட்டி” எனப்படும் சிறு ரக வாகனங்கள் அல்லது ஸ்கூட்டர்களை பயன்படுத்தி, போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவார்கள்.
மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு, போலீசாரின் ரோந்து பணிகளை விரைவுப்படுத்தும்.
அதோடு, நாட்டின் பிரதான நுழைவாயில்களின் பாதுகாப்பு மீதான மக்களின் நம்பிக்கையையும் அது மேம்படுத்த உதவுமென, சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் ஒன்றாவது மற்றும் இரண்டாவது முனையங்களிலுள்ள, பாதுகாப்பு படை வீரர்களுக்கு தலா இரு மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
55 ஆயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஆற்றலை கொண்ட அந்த மின்சார ஸ்கூட்டர்கள், சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் இன்கார்பரேட்டட் கழகம் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
மலேசியாவில், ஆண்டுக்கு 60 மில்லியன் பேர் வருகை புரியும் மையப் பகுதி என்பதால், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில், அதுபோன்ற வாகனங்களை பயன்படுத்துவது முக்கியம் என்பதையும் அமிருடின் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக, இம்மாதம் 14-ஆம் தேதி, ஆடவன் ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை அடுத்து, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்விகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.