
செப்பாங், ஏப்ரல்-19 – செப்பாங், KLIA டெர்மினல் 1 முனையத்தில் பயணப் பெட்டிகளைக் கையாளும் முறை திடீரன செயலிழந்த சம்பவத்தை அடுத்து, போக்குவரத்து அமைச்சு நாளை திங்கட்கிழமை அவசரக் கூட்டத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
நேற்று மாலை ஏற்பட்ட இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வந்திறங்கியப் பயணிகள் தங்களது உடைமைகளைப் பெற சுமார் 4 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இது குறித்து கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், தேசிய நுழைவாயிலான இந்த விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய சேவைத் தரம் இந்தச் சம்பவத்தில் நிலைநாட்டப்படவில்லை என கடும் அதிருப்தி தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கோளாறு நேற்று இரவே சரிசெய்யப்பட்டாலும், இது ஒரு சாதாரணப் பிரச்சனையாகக் கடந்து போக முடியாது என்றார் அவர்.
எனவே நாளை ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டுமாறு அமைச்சின் தலைமைச் செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக்கூட்டத்தில், அவசரகால SOP நடைமுறைகள், பயணிகளுடனான தகவல் தொடர்பு மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளது.
இந்த விவகாரத்தில் மலேசிய விமான நிலையங்கள் நிறுவனமான MAHB மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா என்பது குறித்து விசாரணை நடத்த பொது வான் போக்குவரத்து அதிகாரத் தரப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
KLIA, உலகத் தரம் வாய்ந்த விமான நிலையமாகத் திகழ வேண்டுமானால், பொறுப்புக்கூறல் கலாச்சாரம் மிக முக்கியம் என்றும் அந்தோணி லோக் நினைவுறுத்தினார்.



