தெமர்லோ, டிசம்பர் 29 – LPT1 – கிழக்குகரை நெடுஞ்சாலையில், ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய, 15 வயது பதின்ம வயது மாணவன் ஒருவன் உட்பட நால்வருக்கு எதிராக இன்று பகாங், தெமர்லோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
எனினும், தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து, அந்நால்வரும் விசாரணை கோரினர்.
அவர்களில், 19 வயது அம்மார் முய்சுதீன் அப்துல் அஜீஸ், 20 வயது வான் முஹம்மது சியாஹ்மி வான் சுல்கிஃபிஃப்லி, 22 வயது முகமது ஹைகால் முகமது ஹனாபி ஆகியோர் உயர்கல்விக்கூட மாணவர்கள் ஆவர்.
எஞ்சிய மற்றொருவன், தெமர்லோவிலுள்ள இடைநிலைப்பள்ளி ஒன்றில் பயில்கிறான்.
இம்மாதம் 24-ஆம் தேதி, மாலை மணி 6.30 வாக்கில், LPT1 – கிழக்குகரை நெடுஞ்சாலையில், இதர வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், அவர்கள் அபாயகரமான சாகசங்களை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனையும், 15 ஆயிரம் ரிங்கிட் வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
அவர்களில் மூவரை, தலா மூவாயிரம் ரிங்கிட் உத்தரவாத தொகையிலும், வயது குறைந்த இடைநிலைப்பள்ளி மாணவனை ஆயிரத்து 500 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும் விடுவிக்க, நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இவ்வழக்கு விசாரணை, அடுத்தாண்டு பிப்ரவரி ஆறாம் தேதி செவிமடுக்கப்படும்.