குவந்தான், டிசம்பர் 28 – LPT1 கிழக்குகரை நெடுஞ்சாலையிலுள்ள, அஹ்மட் ஷா பாலத்தில், அபாயகரமான “சூப்பர்மேன்” சாகசம் புரியும் போது விபத்தில் சிக்கி வைரலான மோட்டார் சைக்கிளோட்டிகளில் நால்வர், நேற்று கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களில் மூவர் உயர்கல்விக்கூட மாணவர்கள். எஞ்சிய ஒருவன் 15 வயது பள்ளி மாணவன் ஆவான்.
விபத்தில் சிக்கியதன் விளைவாக, அவர்கள் நால்வரும் உடலின் பல இடங்களில் காயங்களுக்கு இலக்காகி இருந்ததாக, தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் மஸ்லான் ஹசான் தெரிவித்தார்.
15 வயதுக்கும் 22 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் அனைவரும், தெமர்லோ மற்றும் மாறானில், அவர்கள் வீடு அமைந்துள்ள பகுதிகளில் கைது செய்யப்பட்டதையும், மஸ்லான் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் முகவரிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்நால்வரும் அடையாளம் காணப்பட்டனர்.
இந்நிலையில், அந்த விபத்துடன் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுகிழமை, நெடுஞ்சாலையில், அபாயகரமான “சூப்பர்மேன்” சாகசம் புரியும் மோட்டார் சைக்கிளோட்டிகள் சிலர் விபத்துக்குள்ளாகும் காணொளி ஒன்று வைரலானது.
அந்த காணொளியை, சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகளில் ஒருவன் தான் பதிவுச் செய்ததாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.