
சைபர் ஜெயா, ஏப் 21 – MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாகி ( Azam Baki ) ஆகியோருக்கு எதிராக டிக்டோக்கில் போலியான உள்ளடக்கத்தை பதிவேற்றியதாக சந்தேகிக்கப்படும் தனிப்பட்ட நபர் ஒருவர் மீது தொடர்பு பல்லூடக ஆணையமான MCMC விசாரணையை தொடங்கியுள்ளது.
அந்த நபரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், உள்ளடக்கத்தைப் பதிவேற்றப் பயன்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு சாதனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 500,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வழிவகை செய்யும் 1998 ஆம் ஆண்டின் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (சட்டம் 588) -233 ஆவது பிரிவின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது என MCMC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
தற்போதுள்ள சட்டங்களை மீறுவதாகக் கண்டறியப்படும் எந்தவொரு தனிநபர் மீதும் கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் MCMC எச்சரித்துள்ளது.
சமூக ஊடகத் தளங்களையும் டிஜிட்டல் ஊடகங்களையும் பயன்படுத்தும்போது பொதுமக்கள் எப்போதும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.



