கோலாலம்பூர், நவ 27 – பெட்டாலிங் ஜெயா மாநாகர் மன்ற விளையாட்டரங்கில் நேற்று சிலாங்கூர் எம்.சி குழுவுக்கும் பேரா எப்.சி அணிக்குமிடையே சூப்பர் லீக் காற்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற கைகலப்பை தொடர்ந்து 23 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டனர். 16 முதல் 44 வயதுடைய அந்த சந்தேக நபர்கள் அனைவரும் பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று மாலை மணி 5 அளவில் பேரா காற்பந்து ரசிகர்களை ஏற்றி வந்த இரண்டு பஸ்களை விளையாட்டரங்கத்திற்கு அருகே நிறுத்திய போலீசார் அந்த சந்தேக நபர்களை கைது செய்தனர்.
சிலாங்கூருக்கும் பேராவுக்குமிடையிலான ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக 19 முதல் 32 வயதுக்குட்பட்ட ஐவர் தாக்கப்பட்டது தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளானவர்களில் ஒருவர் கை முறிவுக்கு உள்ளானதாக கூறப்பட்டது. மேலும் விளையாட்டரங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு வாகனங்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.