அம்பாங் ஜெயா, ஏப்ரல் 20 – Pandan Perdana-வில் வெளிநாட்டவர்கள் அடிக்கடி சத்தம் போட்டதாக புகார் செய்யப்பட்டப் பிறகும் நடவடிக்கை எடுப்பதில் தாமதம் காட்டியதாகக் கூறப்படுவதை, போலீஸ் மறுத்துள்ளது.
முன்பு டிவிட்டர் என அழைக்கப்பட்ட X தளத்தில் @syednu என்ற கணக்கில் அப்புகார் பதிவேற்றப்பட்டிருக்கிறது.
ஆனால், தாங்கள் விசாரித்ததில் அப்படியெதுவும் புகார் செய்யப்படவில்லை என Ampang Jaya மாவட்ட போலீஸ் துணைத் தலைவர், Superintendan Nazruel Ekram Abu Saare உறுதிப்படுத்தினார்.
எனவே இதில் எங்கிருந்து போலீஸ் தாமதமாகச் செயல்பட்டது என விளங்கவில்லை என்றார் அவர்.
அதோடு, Pandan Perdana பகுதியில் வெளிநாட்டவர்கள் அடிக்கடி சத்தம் போடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலும் உண்மையில்லை என அவர் சொன்னார்.
அப்படியொரு சம்பவம் நடந்ததாகக் கூறி வைரலான காணொலி மீது மேற்கொண்ட விசாரணையில், காணொலியை எடுத்தவர், வெளிநாட்டுப் பெண்ணைச் சினமூட்டுவதும் கணவர் அவரைச் சமாதனப்படுத்துவதும் உறுதியாகிறது.
இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிது. இவ்வாண்டு கூட அப்பகுதியில் அண்டை வீட்டுக்காரர் சத்தம் போட்டதாகக் கூறி இதுவரை ஒரே ஒரு புகார் மட்டுமே கிடைக்கப் பெற்றதாக Nazruel Ekram கூறினார்.
உடனடி நடவடிக்கைத் தேவைப்படும் புகார்களுக்கோ அழைப்புகளுக்கோ அம்பாங் ஜெயா IPD எப்போதும் விரைந்து செயலாற்றும் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.